Saturday, July 7, 2018

அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே

"அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே"

எங்க வீட்டுல எனக்கு பேரு சாப்பாட்டு ராமன், வெளுத்துக் கட்ட மாட்டேன், ஆனா டயத்துக்கு எனக்கு சாப்பிடணும். சூழ்நிலை எதுவா இருந்தாலும் சரி. எனக்கு சாப்பாடு முக்கியம். அதுக்காக பறக்காவெட்டின்னு நினைச்சுடாதீங்க (ஆனா என்னோட பாட்டி அப்படிதான் சொல்வா என்னை). தேவையான நேரத்துல பட்டினி இருக்கவும் முடியும் என்னால. ஆனா சாப்பாடு என்னோட தினசரி நடவடிக்கைல முக்கியமான விஷயமா இருந்ததென்னவோ உண்மை.

என்னால பட்டினி கிடக்க முடியும்னு சொன்னேன் இல்ல. ஆனா சமையல் முடிஞ்சுடுச்சுன்னா சாப்பிடணும்னு தோணற எண்ணத்த என்னால அடக்க முடியாது. மனசு சாப்பாட்டையே சுத்தி சுத்தி வரும், சாப்பிட்டு முடிச்சுட்டா அதைப் பத்தி நினைப்பு இருக்காது. இதுக்கு முக்கிய காரணம் என்னோட அம்மாவா இருக்கலாம்.
"முன்னை இட்ட தீ முப்புரத்திலே,
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே,
என் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே"ன்னு என்னோட வயித்துல பசித்தீயை தன்னோட அருமையான சமையலால மூட்டி விட்ட மகராசி. எங்க அப்பாவும் பசங்க பட்டினியா கெடக்க விட மாட்டாரு, பெரும்பாலான விசேஷங்கள்ல ஏதாவது எங்களுக்கு டிஃபன் கிடைக்க ஏற்பாடு செஞ்சுடுவாரு.

சின்ன வயசுல பரவாயில்ல, பசியை அடக்கறது கஷ்டம். ஆனா பெரியவனானப்பறமும் பசி பொறுக்காது எனக்கு. சமையல முடிச்சிட்டு அம்மா "சஷ்டியை நோக்க சரவணபவனார்"னு கந்த சஷ்டி கவசம் படிக்கறப்ப, என்னோட மனசு
"பட்னியைப் போக்க சரவணபவனில்
இட்லிகள் இரண்டு பொங்கல் வடையுடன்
காலையும் மாலையும் சென்று தின்று வர
பசியும் குறையும் வயிறும் நிறையும்"னு
பாடும். பூசை முடிஞ்சு நைவேத்தியம் ஆனாவொடனே நேர கிச்சன்ல போய் என்ன காய்னு பாப்பேன், ஏதாவது கிழங்கு வகைன்னா உடனே ஒரு பிளேட்ல எடுத்து வெச்சு ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி தின்பேன். 
Image may contain: 1 person, smiling, sitting, food and indoor

இதெல்லாம் அம்மா சமைச்சுண்டிருந்த வரைலதான், தாயோடு அறுசுவை உண்டி போம்ங்கறது சரிதான். அதுக்கப்பறம் மன்னியோட சமையல்தான், சும்மா சொல்லப்படாது எனக்கு பசிக்கும்னு காலம்பற ஏழரை மணிக்கே எல்லாம் தயார் செஞ்சுடுவா. மத்தியானம் எனக்கு டிஃபன்தான் வேணும். அதுனால ஒவ்வொரு தோசையா வாத்துப் போடுவா பொறுமையா, எனக்கு உப்புமா ரொம்ப புடிக்கும்னு சாயங்காலம் அடிக்கடி உப்புமா செஞ்சு வெச்சுடுவா. பொங்கல் என்னோட அம்மா, அக்கா, மன்னி இவா 3 பேரும் செஞ்சு சாப்பிடணும். என் ஊருலேர்ந்து என் நண்பன் மெட்றாஸ் வந்தா, எங்க மன்னி கையால பொங்கல் சாப்பிடவே எங்க வீட்டுக்கு வருவான், "அண்ணி, பொங்கல் செஞ்சு தாங்கன்னு" உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவான். எங்க அண்ணனும் ஒண்ணும் சொல்ல மாட்டான். என்ன விட 3 வயசு சின்னவாதான் என்னோட மன்னி. ஆனாலும் ஒரு மரியாதைல அம்மா மாதிரி அதிகாரம் செய்ய மாட்டேன். அதுவுமில்லாம நம்ம கேக்கறதுக்கு முன்னாடியே எல்லாம் கெடைக்கறப்ப எதுக்கு அதிகாரம் செய்யணும்.

இந்த ராஜோபசாரம் எல்லாம் கல்யாணம் ஆற வரைக்கும்தான். கல்யாணம்ங்கறது ஒரு மனுஷனோட வாழ்வுல ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்ங்கறது உண்மைதான். ஆனா எந்த வகைல அந்த மாற்றம் வரும்னு கடவுளால கூட கணிக்க முடியாது. தனியா போக வேண்டியதாப் போச்சு, பைசா கஷ்டமாச்சு. அக்கா வீட்டுலயும், மன்னி வீட்டுலயும் வந்து சாப்பிட்டு போக சொல்லுவாங்க. ஆனா பழைய உரிமையோட சாப்பிட முடியல. பெரும்பாலும் மதிய சாப்பாடு கட் வார நாள்ல. காலைல எப்படியோ ரெண்டு இட்லி (3 ரூபாதான்) தேத்திடுவேன். நைட் ஒரு தோசை இல்லேன்னா தயிர் சாதத்துக்கு 10 ரூபா தேத்தி வரும்போதே தட்டேந்தி பவன்ல முடிச்சுட்டு வந்துடுவேன். நிலையான வேலை இல்ல அந்த சமயத்துல.

இது மாதிரி ஒரு மூணு நாலு வருஷம் கஷ்டப் பட்டேன். அதுக்கப்பறம் நான் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி செஞ்ச பிசினஸ ஆரம்பிச்சு ஓரளவு ஸ்டெடியானேன். ஆனாலும் பெரும்பாலும் தனியாதான் இருக்க வேண்டியிருந்தது. ஓரளவு சூழ்நிலை சரியானதும் மறுபடி அக்கா, அண்ணா கூட அவங்க இருக்கற அபார்ட்மெண்ட்ஸ்லயே பக்கத்துல அக்காவோட ஃபிளாட்ல தங்கிக்கிட்டு பிசினஸ செஞ்சிட்டிருந்தேன். சில சமயம் எனக்கு தேவையானதை நானே சமைச்சுக்குவேன், சாப்பாடு மட்டும் அக்கா இல்ல அண்ணா வீட்டுல.

இன்னிக்கும் எனக்காக ஒரு குடும்பமே உழைக்குது. எங்க அக்கா குடும்பம்தான். எங்க அக்கா, அத்திம்பேர், அக்கா பையன், மருமகள்னு எனக்கு பசிக்காம பார்த்து பார்த்து செய்யறாங்க. கடவுளே அவங்களை நல்லா வெய்.

No comments:

Post a Comment