Saturday, June 23, 2018

கனவில் கண்ட திருமுகம்

"கனவில் கண்ட திருமுகம்"

"ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு, கனவினிலே என் அவள் வந்தாள்"

உண்மையிலே அது ஒரு நிலாக் காலம். இருபதுகளில் என் வயது. யார் பின்னும் அலைந்ததில்லை. ஆனால் அழகை ஆராதனை செய்வேன். அதில் தவறில்லை. அப்படி ஒரு நாள். இன்றும் பசுமையாய் என் நினைவில் இருக்கிறது அந்த கனவு. கனவிலே என் அவள் வந்தாள். அவளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஆதலால் பாரதியின் வார்த்தைகளில் வர்ணிக்கிறேன்.

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் 
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை 
பொங்கிவரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் 
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம் 
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து 
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனை கண்விழித்தேன் அடடா, ஓ அடடா 
அழகெனும் தெய்வம்தான் அதுவென்று அறிந்தேன்.

பாரதியின் வர்ணனைகள் அவளுக்கு அப்படியே பொருந்தும். கனவில் உண்மையிலேயே அவள் என்னை எழுந்து அவளைப் பார்க்க சொன்னாள். ஒருவேளை பாரதியின் பாடலை அப்போதைய சமீபத்தில் கேட்டிருந்தேனா என்பது தெரியவில்லை. எனக்கு இப்பாடல், குறிப்பாக சி எஸ் ஜெயராமன் குரலில் மிகவும் பிடிக்கும். தூங்காதே என்று அவர் ஒரு சிறிய நிறுத்தம் கொடுத்து பாடும் அழகே தனி. அந்த நினைவில் அந்தக் கனவு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் உண்மை போலவே இருந்தது. உண்மையிலேயே அவள் அழகெனும் தெய்வம்தான். எனக்கு ஒரு அனுபவம் உண்டு. எதாவது விசித்திரக் கனவு வந்தால் அது ஒரு வாரம், பத்து நாட்கள் மறுபடி மறுபடி வரும். அது போல் இது மறுபடி வருமா என்று நப்பாசை. பேய்க் கனவுகளும் குரங்குக் கனவுகளும்தான் அப்படி வரும் போலிருக்கிறது. இது வரவில்லை, ஆனால் அது ஆழப் பதிந்து விட்டது.

நீங்கள் சில திரைப் படங்களில் பார்த்திருப்பீர்கள், கனவில் ஒரு பெண்ணைக் கண்டு ராஜகுமாரன் அதே பெண்ணுக்காக காத்திருப்பதும் தேடி அலைவதும். எனக்கு அது சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் என்னுடைய நிலை இப்படி ஆயிற்று. நான் பார்க்கும் பெண்களிலெல்லாம் அவள் முகத்தைத் தேடத் துவங்கினேன். சிலர் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் துவங்கினார்கள். அவன் பார்வையே சரியில்லை என்ற பேச்சுக்களும் என் காதில் அவ்வப்போது விழுந்தன. நான் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை.
Image may contain: 1 person, text

வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கத் துவங்கினார்கள். நான் பிடி கொடுக்கவில்லை. மீறி வரும் ஜாதங்களை நான் வேறு யாருக்காவது அனுப்பி விடுவேன். இப்படியே காலம் சென்று கொண்டிருந்தது, நான் ஒரு வரைகலை நிறுவனம் சொந்தமாக வைத்திருந்தேன். நடுவில் ஒரு ஐந்து வருடங்கள் வேலைக்குப் போனேன். அப்போது கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அது தனிக்கதை. பிறகு சில காலம் பயங்கரக் கஷ்டம். எந்த வேலையும் சரிப்படவில்லை. வயதும் 40 தாண்டி விட்டது. வீட்டில் தாளவொண்ணாத பிரச்சினை. யாருக்கும் தெரியாமல் ஒரு ஹோட்டலில் கூட வேலை செய்தேன். அப்போதும் பிடுங்கல்கள் தாங்கவில்லை. விரக்தியும் கோபமும் தாளாமல், என்னை விட்டு விடுங்கள், நான் பழையபடி GRAPHIC DESIGNING & PRINTING பிசினஸ் செய்கிறேன் என்று ஒரு நாள் சத்தம் போட்டு விட்டு முதலில் கம்பெனி பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். (FANTASY UNLIMITED). அதிர்ஷ்டம், ஒரு லண்டனை சேர்ந்த தமிழ் பிசினஸ்மேன் சில ஆர்டர் கொடுத்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அயராத உழைப்பினால் MNC ஆர்டர் எல்லாம் வரத் துவங்கின. 

அப்படி ஒரு நாள் ஒரு பெரிய கம்பெனிக்கு அதன் எம் டியை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றுக் காத்திருந்து அழைப்பு வந்தவுடன் உள்ளே சென்றேன். என்ன அதிசயம், பாரதியின் அழகுத் தெய்வம். பதவிக்கேற்றவாறு அதே ஆணையிடும் தொனி. அந்த கம்பெனியின் ப்ராஜெக்ட் பெரிய ப்ராஜெக்ட்டாக இருந்ததால் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சில சமயம் ஹோட்டல்களில் டின்னருடன் டிஸ்கஷன். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தைப் பற்றிய விசாரிப்புகள். நான் சுருக்கமாக சொன்னேன் என் குடும்பத்தைப் பற்றி. அவளைப் பற்றி கேட்டேன். அவள் சொன்னாள்.

"என் கனவில் வந்த நாயகனைக் காணவே முடியவில்லை, எனவே அப்படியே இருந்து விட்டேன்" என்று.

யாரென்று கேட்டு மனதை நோகச் செய்ய விரும்பவில்லை (இருவர் மனதையும்தான்).

நன்றி: ஓவிய நண்பர் ஷ்யாம் ஷங்கர்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"

திருச்சியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த சமயம். ஒரு நாள் மெயின்கார்ட் கேட் பஸ் ஸ்டேண்டுல ரூட் 64 - துப்பாக்கித் தொழிற்சாலை போற வண்டி - எங்க காலேஜ்குள்ள கொண்டு போய் விடும். அதுனால நெறைய பேர் அதுலதான் ஏறுவோம். நான் இதுக்காகவே மெயின்கார்ட் கேட் போய் ஏறுவேன், உக்காந்தும் போகலாம். நான் உக்காந்து மேத்ஸ் ரிவைஸ் செஞ்சுட்டே வருவேன். அப்படி ஒரு நாள் - அழகிய காலையாக இருந்தது, தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பொழுது. நவம்பர் மாதம் ஆதலால் வண்டி புறப்பட்டதும் சில்லென்று ஒரு காற்று முகத்தில் வீசியது, ரம்மியமான காலை. அப்போது காதில் மெதுவாக "ஏழு ஸ்வரங்களுக்குள்" பாடலின் ஹம்மிங் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தால், அன்றலர்ந்த அல்லிப்பூ, வெட்கத்துடன் புன்னகை பூத்தது. நான் பதிலுக்கு புன்னகை பூத்துவிட்டு (அசடு வழிந்து என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்) திரும்பிக் கொண்டு புத்தகத்தை மூடி விட்டு, ஹம்மிங் தொடர்கிறதா என்று உற்றுக் கவனித்தேன். இல்லை. அதற்கப்புறம் ஏதுவும் இல்லை. 

அவள் பேரழகு இல்லை. ஆனால் பளிச்சென்று திருத்தமான முகம். எவரையும் வசீகரித்து விடும் சிரிப்பு. எப்போதும் நெற்றியில் பொட்டு தவறாது இருக்கும். அந்த பொட்டு நிலவிற்கு பொட்டு வைத்தது போல் இருக்கும். 
Image may contain: 1 person

அடுத்த ஓரிரு நாட்கள் பஸ் கிளம்பியவுடன் பின்னால் திரும்பிப் பார்ப்பது வழக்கம் அவள் இருக்கிறாளா என்று. ஆனால் வேறு எங்காவது அமர்ந்திருப்பாள். ஆனால் அங்கிருந்து என்னைப் பார்த்து ஒரு புன்னகை மட்டும் தவறாமல். மனதில் வசந்த காலங்கள் இசைந்து பாட ஆரம்பித்தன. ஒரு நாள் அவளைக் காணவில்லை. பஸ் கிளம்பியும் வரவில்லை. சரி என்று நான் படித்துக் கொண்டு வந்தேன். பஸ் மரக்கடை ஸ்டாப்பில் நின்றது. அப்போது ஏதோ குறுகுறுவென்றிருக்கவே ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தருமபுரியில் என்னுடன் படித்த பெண் இன்னொரு பஸ்ஸிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சிரிக்கவே அவளும் சிரித்தாள். அப்போது பின்னாலிருந்து கனைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், நிலா! ஆனால் அப்போது சூரியனின் வெம்மை முகத்தில். போதாக்குறைக்கு தருமபுரி பெண் என்னைப் பார்த்து கையாட்டி வேறு சென்று விட்டாள். அடுத்த 15 நாளும் அமாவாசைதான்.

சிறிது நாட்கள் சென்று இடைவேளையில் என்னுடைய வகுப்பில் படிக்கும் பெண்ணுடன் வந்தாள். என்னுடைய மேத்தமேடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் புத்தகம் வேண்டும் என்று. அப்போதுதான் பெயர் தெரிந்தது. அது வரை நிலா என்றுதான் பெயர் வைத்திருந்தேன். மறுபடியும் அவ்வப்போது புன்னகை கிடைக்கும், வேறு பேச்சு எதுவும் இல்லை.

சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள் மாலை பிசிக்ஸ் லேபிலிருந்து கிடார் இசை, தப்லா ஒலி, பாட்டு சத்தம் எல்லாம் கேட்கவே எட்டிப் பார்த்தேன். திருச்சி வானொலி நிலையத்தில் இளைய பாரதம் நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரியிலிருந்து பங்கு பெறுவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. விடுவோமா நம்ப. பாங்கோஸ் வாசிக்க போயிட்டேன். மொதல்லயே இது பத்தி தெரியாததால எனக்கு அதுக்கு மட்டும்தான் சான்ஸ் கிடைச்சுது. நம்ம அதுக்காகவா போனோம். நம்ம நிலாதான் அங்க மெயின் பாடகி. அதுக்குத்தானே, சில பாடல்கள் பாடி முடிச்சதும். நான் நிலாவை ஏழு ஸ்வரங்களுக்குள் பாட சொன்னேன். அவளும் பாடினா. எல்லாருக்கும் ஆச்சரியம், ப்ரொஃபசர்ங்க உட்பட. இவன் ஏன் இந்தப் பாட்ட குறிப்பா பாட சொல்றான்னு. 

அப்படியே அப்பப்ப எதாவது பேச்சு வார்த்தை நடந்திட்டிருந்தது. 3 ஆம் வருஷம் படிக்கறப்ப திருச்சில இருக்கற எல்லாக் கல்லூரிகளுக்கும் கல்ச்சுரல் காம்பெடிஷன். எங்க காலேஜ் அப்பத்தான் முதல் முறையா கலந்துக்கப் போவுது, இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ரெண்டே ரெண்டுதான். ஒரு கிடார். பாங்கோஸ். அதுல ப்ராக்டிஸ் செஞ்சு ப்ரோக்ராம் நடக்கறப்ப வேற காலேஜ் பசங்க கிட்ட கேட்டு எலெக்ட்ரிக் கிடார், ட்ரிபிள் காங்கோ கடன் வாங்கி வாசிச்சுக்கலாம்னு பிளான். நான் அவளுக்காகவே ரெண்டு பாட்டு "ஆசையை காத்துல தூது விட்டு" "மேகமே மேகமே ரெண்டும் செலெக்ட் செஞ்சேன். ப்ரோக்ராம் நம்ம பொறுப்புல விட்டாங்க, மொதோ பாட்டே ஆசையைக் காத்துல தூது விட்டு, கிடாரிஸ்ட் அருமையான பிளேயர். எல்லா மெயின் வாத்தியங்கள் ஒலிகளையும் அதில் மேனேஜ் செஞ்சான். நான் ட்ரிபிள் காங்கோ. மொத பாட்டு சூப்பரா அமைஞ்சது. ப்ரோக்ராம்க்கு மொத நாள் தான் ஃபர்ஸ்ட் இயர் பையன் ஒருத்தன் வந்தான், அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே பாடுவான். அவனை வெச்சு அப்பத்தான் பிரபலமா இருந்த கண்ணே கலைமானே ரெண்டாவது பாட்டா போட்டோம். அப்பறம் இளைய நிலா, தோகை இளமயில்னு பாடி, கடைசில மேகமே மேகமேல முடிச்சோம். அதுக்கு தப்லா கூட இல்ல. அவ கொரல நம்பிதான். எங்களுக்கு ப்ரைஸ் கிடைக்கல, ஆனா எல்லாரும் பாராட்டினாங்க எங்க பர்ஃபாமன்ஸ் ரொம்ப நல்லா இருந்ததுன்னு. ப்ரோக்ராம் முடிஞ்சு முத்தரசநல்லூர் போகணும் எங்க வீட்டுக்கு அதுனால பஸ் ஸ்டான்ட் வரைக்கும் துணை வரை சொன்னா. அதுவும் எப்படி தெரியுமா, "நீ என்னோட துணைக்கு வருவியா?" அப்படின்னு ஒரு பாஸ் "பஸ் ஸ்டான்ட் வரைக்கும்" அப்படின்னு. என்னத்த சொல்ல. பஸ் ஸ்டான்ட் வரை போய் பஸ் ஏத்திட்டு வந்தேன், எதோ பேசிட்டு போனோம். 

அதுக்கப்புறம் காலேஜ்ல எப்பவாவது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைதான், நான் தமிழ்ப் பட பாடல்கள் எல்லாம் எழுதி ஒரு டயரி வெச்சிருக்கேன். அதை கேட்டு வாங்கிப் போனா. அப்பறம் நானே வெச்சுக்கறேன்னு சொன்னா. காலேஜ் முடிஞ்சு போறப்ப என்னோட அட்ரஸ் வாங்கிகிக்கிட்டு அவ அட்ரஸ் குடுத்தா. போறதுக்கு முன்னாடி என்னை ஆழமா ஒரு பார்வை பாத்தா. அட்ரஸ் வாங்கியும் யாரும் லெட்டர் போட்டுக்கல. எங்க ஃ ப்ரெண்ட்ஷிப் எப்படிப் பட்டதுன்னு எங்களாலேயே கணிக்க முடியல. 

காலம் அப்படியே ஓடிப் போச்சு. 2002 னு நினைக்கறேன், என் அண்ணா பொண்ண ஸ்கூல்ல விடப் போனேன். அங்க பாத்தா அவ க்ளாஸ் டீச்சர் இவதான். கொஞ்ச நேரம் க்ஷேம நலன் விசாரிச்சா. அப்பறம் சொன்னா. நான் 1996லதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எதுக்காக காத்திருந்தேன்னு தெரியலன்னு சொன்னா. நான் சொன்னேன் நான் 1998லதான் (36 வயசுல) அப்டின்னவொடனே அப்படியே தெகைச்சுப் போய் பாத்தா.

அவ கடைசியா பேசினது. "ஏதோ மிஸ் பண்ணிட்டோம், என்ன எதிர்பார்த்தோம்னு தெரியாமலேன்னு" 

அப்பறம் கேட்டா "உனக்கு எதனை குழந்தைங்க"

"ரெண்டு பெண் குழந்தைங்க, பெரியவ பேரு ரம்யா" நான். 

நிலவின் முகத்தில் மூன்றாம் பிறை போன்று ஒரு புன்னகை. பிறகு வகுப்புக்கு சென்று விட்டது நிலவு. நான் அவள் பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவில்லை. கேட்பானேன், பிறகு வருத்தப்படுவானேன் என்று. அதுவே எங்கள் கடைசி சந்திப்பு. அவள் எங்கு இருக்கிறாள் என்று நானும் நான் எங்கு இருக்கிறேன் எங்கு அவளும் கேட்கவில்லை. என் அண்ணா பெண்ணையும் அடுத்த வருடம் வேறு ஸ்கூல் மாற்றி விட்டோம். 

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னகையில் என்னை சுட்ட நிலா 
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது 
எட்ட நின்று என்னைத் தொட்ட நிலா"

ஓவியம் - இளயராஜா

Thursday, June 14, 2018

ராசாத்தி ஒரு ரோசாப்பூ

"ராசாத்தி ஒரு ரோசாப்பூ"

"என்ன காளியம்மா, பேத்தியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கே?"

"ஆமாம் அயிரம்மா, செட்டியார் வூட்டுல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க, நான் அங்க போறேன், நீங்க இவளை எனக்கு பதில் வேலைக்கு வெச்சுக்குங்க"

அந்த சிறுமிக்கு 10 வயதுதான் இருக்கும். சீட்டி பாவாடை சட்டை போட்டு, ரெட்டைப் பின்னல் பின்னி பளிச்சென்றிருந்தாள். அவள் பாட்டி எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அவர்களுக்கு நிலத்தைக் குத்தகை விட்ட உரிமையாளர் வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டுமென்று கேட்டதால் இவளை எங்கள் வீட்டில் வேலை செய்ய அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். 

அவள் பெயர் ராசாத்தி. வெளிர் நிற ரோஸ் கலரில் இருந்தாள். நடிகை அஞ்சலிதேவியை நினைவுபடுத்தும் முகம். அதே போன்ற புன்னகை எப்போதுமே முகத்தில் தவழும்.

"ரொம்ப சின்னப் பொண்ணா இருக்குதே, வேலை நல்லா செய்யுமா?"

பாட்டி பதில் சொல்வதற்குள் ராசாத்திக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 

"எல்லாம் செய்வேன், ராசாத்தி வேல ரோசாப்பூ மாதிரி இருக்கும்" என்றாள் 

"அடடே ரோஷத்தைப் பாரு" என்று என் அம்மா பரிகாசம் செய்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

அவளை விட்டு விட்டு பாட்டி சென்று விட்டார்கள். சில வேலைகளை மட்டுமே அம்மா சொல்ல வேண்டியிருந்தது. மீதி வேலைகளை அவளே பார்த்து பார்த்து செய்தாள். சிறிய பெண்ணாயிருந்ததால் எங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டோம். நாங்கள் உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். அக்கா 6 வயது. அண்ணன் 4 வயது, நான் 3. வீட்டு வேலைகளுக்கிடையில் எங்களையும் கவனித்துக் கொண்டு, குளித்து வருவதற்குள் புதிய உடைகள் எடுத்து வைப்பது, அக்கா பள்ளி செல்ல புத்தகங்களை தயாராக வைப்பது, அக்காவை ஸ்கூல் வரை கொண்டு சென்று விடுவது என்று துளியும் அசராமல் வேலை செய்வாள். 

பசி என்று கேட்கமாட்டாள். எங்கள் அம்மா கூப்பிடும்போதுதான் சாப்பிட வருவாள். எங்கள் அம்மா அவளை வேலைக்காரியாகவே நடத்தவில்லை. அவளுக்கும் என் அம்மா மீது அலாதி பிரியம். அதைக் கண்ட எங்கள் அப்பா எங்கள் அம்மாவிடம் சண்டை போடுவது போல் நடிப்பார். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அப்பாவுடன் பயங்கரமாக சண்டை போடுவாள். ஒரு முறை அப்பா அம்மாவை அடிப்பது போல் பாவனை செய்ய ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அப்பாவை விரட்ட ஆரம்பித்து விட்டாள். அம்மா சொல்லித்தான் நிறுத்தினாள்.

நான் சின்னப் பையனாக இருப்பதால் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். ஒவ்வொரு முறை அம்மா சம்பளம் கொடுக்கும்போதும். "அம்மா எனக்கு சம்பளம் வேண்டாம், இவனைக் கட்டிக் குடுத்துடுங்க" என்று கிண்டல் செய்வாள். நான் சந்தேகத்துடன் அம்மாவிடம் அப்படி செய்வியா என்று கேட்டேன், அம்மா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டு போய் விட்டாள். இந்தக் காட்சி அடிக்கடி நடக்கும்.

திடீரென்று அவளுடைய பாட்டி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆகவே அவளது அம்மா, கண்ணம்மா, வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். (இவங்களைப் பாத்துதான் விசு சம்சாரம் அது மின்சாரம் படத்துல கண்ணம்மா கேரக்டரையே வெச்சாரு, அப்படியே இருப்பாங்க, இவங்களை வெச்சு ஒரு நாவலே எழுதலாம்).

நான்கைந்து நாட்கள் கழித்து அவளது அம்மாவுடன் ராசாத்தி வந்தாள். எங்க ராசாத்தி ஆளைக் காணும்னு கேட்டேன். எனக்கு கல்யாணம், அதுக்குதான் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்தேன் என்று சொன்னாள். எனக்கு பயம். அம்மாவிடம் கேட்டதற்கு அம்மா பயப்படாதே, அவளோட மாமனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வெக்கறாங்க என்று அம்மா சொன்னதும்தான் நிம்மதி. இந்த வயசுல கல்யாணமான்னு மட்டும் தோணிச்சு.

Image may contain: 1 person, smiling

கல்யாணத்துக்கு போனோம். குழந்தைக்கு புடவை கட்டினா மாதிரி இருந்தது. அப்பவும் குறும்பு மாறாமல் தன் புருஷனிடம், "இந்த மைனரைத்தான் கட்டிக்கலாம்னு இருந்தேன், இது மாட்டேன்னுடிச்சி, அதான் உங்களைக் கட்டிகிட்டேன்" என்று சொன்னாள். அவள் புருஷனுக்கும் எங்கள் குடும்பத்தை நன்கு தெரியும், அவரும் என்னைப் பார்த்து பலமாக சிரித்தார்.

அப்புறம் மாதம் ஒரு முறை வந்து போவாள். பிறகு அது தேய்ந்து வருடம் 3 முறை என்று ஆயிற்று. தங்க சிலை மாதிரி இருந்தவள், அலங்காரம் செய்யாத அம்மன் போல களையிழந்து தோற்றமளிப்பாள். எங்கள் அம்மாவிடம் எதோ சொல்லி அழுவாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு குடிகாரன் என்று. வேலைக்கு செல்வான், இவளை துன்புறுத்த மாட்டான், ஆனால் பைசா தரமாட்டான் வீட்டிற்கு. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்து அவள் தன் இரண்டு பையன்களையும் பெண்ணையும் வளர்த்தாள்.

வருடங்கள் உருண்டோடின. நாங்கள் சென்னை வந்து குடியேறி விட்டோம். என் அப்பா, தொடர்ந்து அம்மா மறைவு என்று சொந்த ஊருக்கு செல்வது குறைந்து விட்டது. என்னுடைய திருமண வாழ்வும் சரியாக இல்லை. 2010ல் ஒரு நாள் எதோ தோன்ற சொந்த ஊருக்கு சென்றேன். நண்பர்களை சந்தித்தேன், ராசாத்தி வீட்டிற்கும் சென்றேன். அவள் புருஷன் இறந்து விட்டிருந்தார். குடிதான் காரணம். ஆனால் ஒரு கோடி மதிப்புள்ள நிலங்கள் விட்டு சென்றிருந்தார். அரசு மருத்துவமனையில் டிரைவராக இருந்தபோது இறந்து விட்டதால் இழப்பீடும், ஓய்வூதியத் தொகையும் வேறு இவளுக்கு வந்தது. அவள் முகத்தில் சிறிதும் சோகம் இல்லை. ஞானியைப் போல இருந்தாள்.

"என்ன ராசாத்தி, உன் புருஷன் உன்னை இப்படி விட்டுவிட்டு போயிட்டாரே" என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள், பெரிய அளவில் தனக்கு எதுவும் துக்கமில்லை என்று. ஏன் என்று கேட்டேன். அதற்கு அவள் "அவர் ஒரு ஜென்டில்மேனா இருந்தாரு" என்றாள். புரியாமல் பார்த்தேன், குடியும் குடுத்தனமுமாக (வேறு சில தொடர்புகள்) இருந்தார் என்றாள். ஜென்டில்மேனுக்கு அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"ராசாத்தி, நீ சொன்ன மாதிரி என்ன கல்யாணம் பண்ணிட்டிருந்தா, இப்ப இப்படி ஆயிருக்குமா?" என்று கேட்டேன்.

"ஆமாடா, உனக்கும் இந்த பிரச்சினை வந்திருக்காது" என்றாளே பார்க்கலாம்.

Sunday, June 10, 2018

ஈசுபரி அல்வா ஸ்டால்

"ஈசுபரி அல்வா ஸ்டால்"

எங்கள் ஏரியாவிலேயே ரொம்ப ஃபேமஸான ஸ்வீட் கடை. நெறைய ஸ்வீட் செஞ்சாலும் அவங்க செய்யற அல்வாவுக்குத்தான் அங்க ரொம்ப மவுசு. எப்ப பாத்தாலும் கடைல ஒரு பத்து கஸ்டமராவது இருப்பாங்க. அல்வாவுக்கு பாதி கூட்டம்னா, கல்லால இருக்கற ஓனர் கருப்புசாமி பொண்ணு ஈசுபரிக்காக மீதி கூட்டம். 12 வயசுலயே 16 வயசு வளர்ச்சி. பாவாடையும் மேல இறுக்கமா ஒரு சட்டையும் போட்டிட்டிருக்கும். போதாதா நம்ம மக்களுக்கு. சீஸுபரி ஹை மஸ்து மஸ்துன்னு பாடாத கொறைதான். கண்ணு ரெண்டும் நல்ல முட்டைக்கண்ணு. கோவில் சிலைக்கு எண்ணெய் தேச்சுவிட்டா மாதிரி ஒரு பளபளப்பான கருப்பு. அந்த வயசுலயே பைசா அகலப் பொட்டு. இந்த ஈசுபரி 5 ஆவது வரைக்கும் என் கூட படிச்சது வேற விஷயம்.கண்ணு ரெண்டும் நல்ல முட்டைக்கண்ணு. கோவில் சிலைக்கு எண்ணெய் தேச்சுவிட்டா மாதிரி ஒரு பளபளப்பான கருப்பு. அந்த வயசுலயே பைசா அகலப் பொட்டு. இந்த ஈசுபரி 5 ஆவது வரைக்கும் என் கூட படிச்சது வேற விஷயம்.

எங்க வீட்டிலிருந்து எங்க போகணும்னாலும் அந்த கடையைத்தான் தாண்டி போகணும். நான் ஸ்கூலுக்குப் போகும்போதும் சரி, எங்கயாவது கடைக்குப் போகும்போதும் சரி, ஈசுபரி தன்னோட 32 பல்லையும் காமிச்சு, "என்ன அய்யரே, நம்ம அல்வா சாப்பிட்டுப் பாக்கறது"ன்னு சத்தமா சொல்லுவா. எனக்கு அவ கொரலைக் கேட்டாலே அலர்ஜி. நெறம் குயிலுன்னா கொரல் மயிலு. அவ பார்வையும், அப்படியே அல்வாவை வழிச்சு விழுங்கறா மாதிரி என்னை வழிச்சு விழுங்கும். இதுக்காகவே நான் அவங்க கடை வரும்போது ரோடை க்ராஸ் பண்ணி எதிர்பக்கமா போவேன். அப்படியும் விட மாட்டா. அவ அப்படி கேக்கும்போது அவ அப்பன்காரன் என்னமோ உலக மகா ஹாஸ்யத்தை கேட்டா மாதிரி குலுங்கி குலுங்கி சிரிப்பான்.
Image may contain: dessert and food

ஊரே அவங்க கடை அல்வாவை புகழ்ந்தாலும் எனக்கென்னவோ அங்க வாங்கப் புடிக்காது. வீட்டுல ஸ்வீட் வாங்க சொன்னா நான் ஆரியபவன் போயிதான் வாங்குவேன். என்னமோ அந்த கருப்புசாமியைப் பாத்தாலே அவங்க கடைல ஒண்ணும் வாங்கத் தோணாது. எப்ப பாத்தாலும் எண்ணெய் வடியற ஒடம்போட மேல் சட்டை கூட போடாம இருப்பான். இன்னொரு காரணம் அவன் கைப்பக்குவதாலதான் அவங்க கடை அல்வா அவ்வளோ பிரமாதமா இருக்குன்னு பீத்திப்பான். அதுல எனக்கு ஒரு சந்தேகம். எப்படி இவனுக்கு மட்டும் இப்படி ஒரு பக்குவம் வருது, இதுல எதோ வில்லங்கம் இருக்குன்னு ஒரு சந்தேகம். அதுனால அங்க வாங்க மாட்டேன் எதுவும். ஒருதடவை எங்க அப்பா அங்க அல்வா வாங்கிட்டு வந்துட்டாரு. நான் எவ்வளோ கெஞ்சியும் திங்கவே இல்ல. வீட்டுலயும் யாரும் திங்கக் கூடாதுன்னு சண்டை போட்டு அல்வா முழுசும் நாய்க்கு வெச்சுட்டேன். (அது மோந்து பாத்துட்டு தின்னாத போச்சுங்கறது வேற விஷயம்)

சேல்ஸ் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக அவனால ஒரு கடைல கூட்டத்த கண்ட்ரோல் செய்ய முடியல. அதுனால நேரெதிர்க்க இன்னொரு கடை ஆரம்பிச்சு அதுல அவன் பொண்ண ஒக்கார வெச்சுட்டான். அங்க அல்வா மட்டும்தான் சேல்ஸ். இப்ப எனக்குதான் பிரச்சினை. ஸ்கூலுக்கு போறப்ப வரப்ப அவ பாக்கற பார்வையும், பேசற பேச்சும், அப்படியே என்ன விழுங்கிடறா மாதிரி இருக்கும். நான் எதையும் கண்டுக்காம போயிடுவேன்.

ஒருநாள் நான் வெளில கெளம்பரப்ப அவன் கடை வாசல்ல ஒரே கும்பல். கூச்சலும் அதிகமாக இருக்கவே நான் என்னன்னு எட்டிப் பாத்தேன். கருப்புசாமியை போலீஸ்காரங்க வேன்ல ஏத்திட்டிருந்தாங்க. அல்வா டேஸ்ட்டா இருக்கணும்னு அதுல கொஞ்சம் போல கஞ்சா கலந்து செய்வானாம். அதுனாலதான் மக்கள் அவன் அல்வாவுக்கு அடிமையா இருந்திருக்காங்க. நல்ல வேளை நம்ம தப்பிச்சோம்னு நெனச்சேன்.

அங்கிருந்து போகும்போது ஈசுபரிய பாத்தேன். பரிதாபமா என்ன பாத்தா. அவளை அப்படி பாக்க முடியல என்னால. எப்பவும் போல பேசாம நகந்துட்டேன்.

கருத்துதவி - எழுத்தாளர் ராஜேந்திர குமார்

அம்மா ஏன் அழுதாள்?

"அம்மா ஏன் அழுதாள்?"

"அம்மா, நாளைக்கு கார்த்திகைக்கு எல்லா பட்சணமும் செய்வியாம்மா"
"ஆமாண்டா, நீ போய் சமத்தா விளையாடு"

ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அக்கா கிட்டயும் அண்ணா கிட்டயும் போய் மறுநா என்ன செய்யலாம், பட்டாசு எப்ப கொளுத்தலாம்னு பிளான். அக்கா கிட்ட மறுநா போட்டுக்க நல்ல ட்ரஸ் எடுத்து வைன்னு சொன்னேன். எல்லாம் ரெடிடான்னு சொன்னா. 

சின்ன வயசுல தீபாவளிக்கப்பறம் புள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை இது மூணும்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கும், ஏன்னா நெறைய பட்சணம் கெடைக்கும். கார்த்திகைக்கு கூடுதலா பட்டாசு வேற. அதுனால ரொம்ப சந்தோஷமா இருந்தது. அண்ணாவும் அக்காவும் ஸ்கூல்ல படிக்கறதால வீட்டுப் பாடம் எல்லாம் எழுத ஆரம்பிச்சா. நான் அவா பொஸ்தகத்த வெச்சு பொம்மை பாத்துண்டிருந்தேன். அவா முடிச்சப்பறம் எல்லாம் வெளில போயி ஃப்ரெண்ட்ஸோட வெளையாடினோம். 8 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். வெளில போன அப்பா இன்னும் வரல. அவர் வருவார்னு காத்துண்டிருந்தோம். 

அப்பா 9 மணிக்கு வந்தா. வரும்போதே கொஞ்சம் டயர்டா இருந்தா. அம்மா கிட்ட ஒரு 5 ரூபாய நீட்டி இத காசு டப்பால வெய்யின்னு சொன்னா. நான் வெக்கறேன்னு கேட்டேன், வேண்டாம் நீ சின்னப் பையன், எங்கவாவது கீழ போட்டுடுவேன்னு சொல்லி என் அண்ணா கிட்ட குடுத்தா. எனக்கு ரொம்ப அழுகையா போச்சு. 

அப்பா வெளிலேர்ந்து வந்த களைப்பு தீர ஒரு துண்ட தண்ணில நனச்சு ஒடம்ப தொடச்சுண்டு சாப்பிட ஒக்காந்தா. அண்ணா மறுபடி வெளையாட போயிட்டான். அக்கா அம்மாக்கு ஒத்தாசையா அப்பாவுக்கு பரிமாற போனா. நான் மட்டும் தனியா இருந்தேன். மனசுல இன்னும் நம்ம கிட்ட குடுக்கலியே அந்த பேப்பர (காசுன்னா புரியாத வயசு) அப்படிங்கற துக்கம் தீரல. திடீர்னு ஒரு யோசன. நம்மள சின்னப் பயன்னுதானே குடுக்கல. அத எடுத்து தூக்கி எறிஞ்சுடுவோம்னு நைசா சாமி ரூம் போயி காசு டப்பால இருந்து அத எடுத்துண்டு ஜோபில வெச்சுண்டு ரோட்டுக்கு வந்தேன். அதை எடுத்து தூக்கிப் போடப் போகும்போது இன்னொரு யோசன, இதை தேடிக் கண்டு புடிச்சுட்டா அப்படின்னு. அதுனால அத சுக்கு நூறா கிழிச்சு பெரிய சாக்கடைல போட்டேன். நைசா வீட்டுக்கு வந்துட்டேன்.

சாப்பிட்டுட்டு அப்பா நான் இப்பவே போய் வெல்லம், பருப்பு எல்லாம் வாங்கிண்டு வந்துடறேன், அந்த காச எடுன்னு சொன்னா அம்மா கிட்ட. அம்மா போயிப் பாத்தா அதுல இல்ல, அப்பாக்கும் அம்மாக்கும் ஒரே ஷாக். எல்லா எடத்துலயும் தேடினா. எங்க எல்லாரயும் விசாரிச்சா. எங்க அண்ணா, "அம்மா, இவன் அந்த சாக்கடை கிட்ட போயி எதையோ தூக்கிப் போட்டான், நான் வெளயாடறப்ப கவனிச்சேன், ஒடனே உள்ள வந்துட்டான்"னு சொன்னான். எங்கிட்ட எல்லாரும் கேட்டா, நான் சொல்லல. மொதல்ல தன்மையா கேட்டா, அப்பறம் மெரட்டிக் கேட்டா, கடைசில அம்மா கெஞ்சினா, என்னால பொறுக்க முடியல, அந்த பேப்பர கிழிச்சு சாக்கடல போட்டேன்னு சொன்னேன். எல்லாரும் டார்ச் எடுத்துண்டு ரொம்ப நேரம் தேடினா. அப்பாவுக்கு மூஞ்சி இருண்டு போச்சு. அம்மாவுக்கு அழுகை.
No automatic alt text available.

வீட்டுக்குள்ள வந்தவொடனே அப்பா சட்டய மாட்டிண்டு மறுபடியும் வெளிய போனா. அம்மா என்னக் கட்டிப் புடிச்சுண்டு ஓன்னு அழுதா. எனக்கு ஒன்னும் புரியல. ஒரு பேப்பர கிழிச்சதுக்கு ஏன் அம்மா அழறான்னு. அப்பறம் ராத்திரி 10 மணிக்கு மேல அப்பா வந்தா. என்கிட்டே ஒரு பேப்பர நீட்டி இத பத்திரமா காசு டப்பால வைன்னு குடுத்தா. நானும் வெச்சுட்டு வந்தேன். யாரும் எதுவும் பேசல. எல்லாரும் படுத்துண்டு தூங்கிட்டோம்.

எனக்கு மட்டும் தூக்கம் வரல. ரொம்ப நேரம் அம்மா ஏன் அழுதான்னு யோசிச்சிண்டிருந்தேன். புரியல. உங்களுக்கு தெரியுமா அம்மா ஏன் அழுதான்னு?