"ஒரு மட மாது உருகுகின்றாளே, உனக்கா புரியவில்லை"
நான் பணிபுரிந்த அலுவகத்தின் அதே காம்ப்ளெக்சில் அடுத்த அலுவகத்திலேயே அவளும் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தாள். ஐஸ்வர்யா ராயின் அழகு, ஆனால் குடும்பப் பாங்குடன் கூடிய வணங்க வைக்கும் அழகு. நான் மார்கெட்டிங்கில் பணிபுரிந்ததால் அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒருநாள் காலையிலேயே செல்ல லிஃப்டிற்காக காத்திருந்தேன், லிஃப்ட் கதவு திறந்து அவள் வந்தாள் அவளது அலுவலகத்திற்கு, என்னைக் கடந்து சென்றாள். நான் ஒரு நிமிஷம் என்றேன் லிஃப்ட்மேனிடம். அவள் திரும்பிப் பார்த்து சொல்லுங்க என்றாள். நான் மிகவும் முக்கிய வேலையாக இருந்ததால் "சாரி, நான் லிஃப்ட்மேனை சொன்னேன், என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன். அன்று மாலைதான் உறைத்தது, "மடையா, மாங்கா மடையா" என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.
இன்னொரு நாள், அலுவலகத்திற்கு நான் வந்து லிஃப்டில் நுழையும்போது அவளும் வந்தாள். நான் அவளுக்கு வழிவிட்டு கதவருகே நின்று கொண்டேன், ஆட்டோமேடிக் கதவு ஆகையால் தானே மூடிக் கொண்டது. நான் 2 ஆம் தளத்திற்கு சென்று கதவு திறக்கக் காத்திருந்தேன், ஓரிரு நிமிடங்கள் ஆயின, அவள் திருவாய் மலர்ந்து பட்டனை அமுக்கினால்தான் லிஃப்ட் போகும் என்றாள். சரி பல்பு. (அப்படி என்ன நினைப்பு மனசிலன்னு கேக்கப்படாத்)
அவர்களது ஷேர்மார்கெட் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம். எங்களதும் ஷேர்மார்கெட் சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனம். அதன் சென்னைக் கிளையில் நான் மார்கெட்டிங்கில் இருந்தேன், சில சமயம் அவர்களது ஆஃபீஸிலிருந்து எதாவது ஒரு நிறுவனத்தின் ஷேர் அப்ளிகேஷன் வாங்கி செல்ல வரும்போது என்னைப் பார்த்து ஒரு புன்னகை. போதாதா என்னுடைய சக அலுவலர்களுக்கு. கிண்டல்தான், சிலர் அவளை அண்ணி என்றே குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
எங்கள் காம்ப்ளெக்சில் ஒரு சிறிய ரெஸ்டாரண்ட் இருந்தது. சுவையான உணவு வகைகள் கிடைக்கும். நான் பெரும்பாலும் மதிய உணவு 3 அல்லது 4 மணிக்கு அங்கு ஒரு தோசை சாப்பிடுவேன். அந்த நேரத்தில் பெரும்பாலும் கூட்டம் இருக்காது. அவள் அவளுடைய பாஸுக்கு டீ வாங்க வருவாள் மாலையில். அப்படி ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளும் வந்து டீ ஆர்டர் செய்து விட்டு என் எதிரே அமர்ந்தாள். உங்களுடன் பேச வேண்டும். இன்று மாலை உட்லண்ட்ஸ் ட்ரைவின் வர முடியுமா என்றாள். எனக்கும் அன்று மாலை சிறிது நேரம் ஃப்ரீயாக இருந்ததால் சரி என்றேன் (அப்புறம் இரவு 3 மணி வரை வேலை இருக்கும்).
மாலை உட்லண்ட்ஸ் ட்ரைவின் சென்றேன். அவள் சிறிது நேரம் பொதுவாக சில விஷயங்கள் பேசிவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். "உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது, உங்களுக்கு சம்மதம் என்றால் உங்களை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றாள். அவள் முகத்தைப் பார்த்தேன், அதில் ஒரு நேர்மை இருந்தது. ஏற்கெனவே அவளைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருந்தேன். அவள் மிக அழகு என்றாலும் அடக்கமானவள், நேர்மையான எண்ணங்கள் உடையவள் என்று. என் கணிப்பு சரியாகவே இருந்தது.
நீ இத்தனை நாள் ஒன்றும் முயற்சிக்கவில்லையா என்ற உங்கள் குரல் என் காதில் விழுகிறது. அவளது அழகு அனுபவிக்க வேண்டிய அழகல்ல. ஆராதிக்க வேண்டிய ஒன்று. மேலும் அவளை மணந்து கொண்டால், எங்கள் குடும்பத்தில் அவள் பலவித பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இல்லையெனில் தனியே சென்று விட வேண்டும், அதில் எனக்கு விருப்பமில்லை, மேலும் அப்போதைய என்னுடைய சம்பளம் 2,500/- மட்டுமே, ஏறக்குறைய அவளும் அதே சம்பளம்தான் வாங்கியிருக்க வேண்டும். என்னதான் சம்பள உயர்வு வந்தாலும் 7000/- ரூபாய் சம்பளத்தை அடைய குறைந்தது 5 வருடங்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை என்னுடைய குடும்பத்தில் வசதிக் குறைவான நிலையில் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. மேலும் நான் திருமணமே வேண்டாம் என்றிருந்தால் எந்த ஒரு பெண்ணிடமும் காதல் கொள்ளவில்லை, அழகாக இருந்தால் ரசிப்பேன். அதுவும் அவர்கள் நம்மை கடந்து சென்ற பிறகும் முகத்தைத் திருப்பி அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. நேராக கண்களைப் பார்ப்பேன், அவ்வளவுதான், இதையெல்லாம் அவள் கவனித்திருக்கிறாள். என்னை விரும்பும் காரணங்களாக இவற்றையும் சொன்னாள். நான் அவளிடம் தற்போதைய சூழ்நிலையில் என்னால் திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொன்னேன் (என்னுடைய அம்மா இரண்டு சிறுநீரகங்களும் பழுது பட்டு மிகவும் சீரியாஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார்கள்). அவள் பரவாயில்லை காத்திருக்கிறேன் என்று சொன்னாள். தன்னால் என் குடும்பத்திற்கு உதவியாக இருக்க முடியும் என்றும் சொன்னாள். நான் மன்னித்துக் கொள்ளும்படி கூறினேன், மறுப்பதற்கு. அவள் சற்றும் முகவாட்டம் அடையாமல் புன்சிரிப்புடன் கிளம்பிச் சென்றாள்.
சில நாட்களில் என் அம்மா இறந்து விட்டார்கள், நானும் வேலையில் மூழ்கியிருந்தேன் வெறுமையை மறக்க. ஒரு கட்டத்தில் ஒன்றும் புரியாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால் 3 மாதங்களிலேயே என் சர்வீஸ் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் என்னை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். மறுபடியும் அவளை சந்திக்கும் சந்தர்ப்பங்கள். இப்போதெல்லாம் கீழுள்ள ரெஸ்டாரன்டிலேயே பேசுவாள் ஏதாவது ஓரிரு வார்த்தைகள்.
அப்படிதான் ஒருநாள் சொன்னாள், நாளை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள், நீங்கள் இப்போது சொன்னாலும் நான் வீட்டில் சொல்லி அதை நிறுத்தி விடுவேன், எங்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றாள். நான் வேண்டாம், நடப்பது நடக்கட்டும் என்றேன். நான் சொல்வது உங்களுக்கு விந்தையாக இருக்கலாம், எனக்கும் இது மிகுந்த ஆச்சரியமே, பெண் பிடித்துப் போய் மாப்பிளை விட்டார் நிச்சயம் செய்யப்போகும் வேளையிலும் சொன்னாள், இப்போதும் என்னால் வீட்டில் பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்று, நான் ஒன்றும் சொல்லவில்லை, திருமணத்திற்கு ஒரே வாரம் இருக்கும்போதும் இப்படியே சொன்னாள். அப்போதும் நான் மறுத்தேன், மாப்பிள்ளை நியூசிலாந்து, என்னால் அவள் இங்கே கிடந்து கஷ்டத்தில் உழல வேண்டாம் என்று. அப்போதுதான் அவள் முகத்தில் சிறிது வாட்டம், என்னையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் கண்களில் ஒரு வலி தெரிந்தது. ஒன்றும் பேசாமல் போய்விட்டாள்.
அதன்பிறகு நான் அலுவலக டூரில் பிசியாக இருந்து விட்டேன். அவள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து எனக்கு ஃ போன் செய்தாள், அன்றிரவு அவர்கள் அளிக்கும் டின்னரில் கலந்து கொள்ள முடியுமா என்று. நானும் சரி, அதில் கலந்து கொண்டு அவளை வாழ்த்திய மாதிரி இருக்கும் என்று சென்றேன். அவளது கணவரை அறிமுகப் படுத்தி விட்டு "இவர்தான் நான் கூறியவர்" என்றாள். அவர் கணவர் சொன்னார், மிகவும் நன்றி சார், இப்படி ஒரு தேவதையை எனக்கு விட்டுத் தந்ததற்கு என்றார். நான் நினைத்தேன், அவள் தேவதை அல்ல பூஜிக்கப்பட்ட வேண்டிய தெய்வம் என்று.
சில நாட்களிலேயே அவள் நியூசிலாந்து சென்று விட்டாள். போவதற்கு முன் ஒரு முறை வந்து என்னைப் பார்த்து மணம் செய்து கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றாள். அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை, என்னுடைய வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணித்தது சில வருடங்களுக்கு.
நெஞ்சம் மறப்பதில்லை. அவள் நினைவுகள் என் நெஞ்சில் என்றும். ஆனாலும் இன்றும் எனக்கு ஒரு துளியும் வருத்தமில்லை அவளை இழந்ததற்கு. நமக்குப் பிடித்தவர்கள் நன்றாக இருப்பதுதானே நமக்கு மகிழ்ச்சி!





